Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, டி.கே. சிவகுமார், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், 3ம் தேதி, அமலாக்கத் துறை அதிகாரிகளால், டில்லியில், கைது செய்யப்பட்டார். அவரை, ஒன்பது நாள் காவலில் எடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அவரது காவல் நேற்று (செப்., 13) முடிந்ததையடுத்து, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சிவகுமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 'சிவகுமார், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; அவரது காவலை மேலும், ஐந்து நாட்கள் நீட்டிக்க வேண்டும்' என கோரி, அமலாக்கத் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்று, சிவகுமாரின் காவலை, செப்., 17வரை நீட்டித்து, நீதிபதி, அஜய்குமார் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சிவகுமார் மகளிடம், நேற்று முன்தினம், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
முன்னதாக, விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், கர்நாடகாவில், சிவக்குமார், எம்.எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்த போது, பதவியை தவறாக பயன்படுத்தி, அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார். அவரது வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்துடன் சேர்த்து ரூ.200 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
சிவக்குமார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பெயரில், 20 வங்கிகளில் 317 வங்கிக்கணக்குகள் செயல்படுகின்றன. அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் அசையா சொத்துகள் உள்ளன. அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் நடந்த விசாரணையின் போது, அவர் முறைகேடாக ரூ.108 கோடி பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது எனக்கூறினார்